ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளி கொலை: நண்பருக்கு வலைவீச்சு!!
ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் (37), ராஜா (37). இவர்களில் ராஜா குடும்பத்துடன் ஓசூர் பேடரப்பள்ளியில் தங்கி வருகிறார். அதே பகுதியில் சீனிவாசன் தனியாக வசித்து வந்தார். சீனிவாசனும், ராஜாவும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் 2 பேருக்கும் குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சீனிவாசனின் வீட்டில் அவரும், ராஜாவும் சேர்ந்து மது குடித்தனர். அந்த நேரம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, தான் வைத்திருந்த கத்தியால், சீனிவாசனை சரமாரியாக உடலில் குத்தினார். மேலும் சீனிவாசனின் கழுத்தை அறுத்தார்.
இதில் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் துடித்த நேரத்தில் ராஜா அங்கிருந்து ஓடி விட்டார். இந்த நிலையில் சீனிவாசனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அந்த நேரம் சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கொலையாளி ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating