சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை!!
தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த அழகுமலை என்பவரின் 8 வயது மகள் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டின் அருகில் விளையாடி கொண்டு இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (60) என்பவர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றதும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற, இதுபற்றி அவர்கள் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதனை கைது செய்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், ரங்கநாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
Average Rating