காதலன் வீட்டிற்குள் புகுந்து புதுபெண்ணிற்கு அரிவாள் வெட்டு: ஆஸ்பத்திரியில் காதலன் தாலி கட்டினார்!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மேல காலனி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் கலைச்செல்வி (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் இளையராஜவுக்கும் (31) காதல் ஏற்பட்டது.
கடந்த 2 வருடமாக அவர்கள் காதலித்து வந்தனர். இதற்கு கலைச்செல்வியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு கொரடாச்சேரியில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் கலைச்செல்வி அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவலை காதலனிடம் தெரிவித்தார். அவர் காதலனுடன் சென்றார். அவரது வீட்டில் தங்கி இருந்தார்.
இது குறித்து ஊர் பஞ்சாயத்தில் முறையிடப்பட்டது. அவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர்.
திருமணத்திற்கு தேவையான தாலி மற்றும் பொருட்கள் வாங்க நேற்று இரவு இளையராஜா அம்மாப்பேட்டை வந்தார். வீட்டில் கலைச்செல்வி மற்றும் இளையராஜாவின் வயதான தாய் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அப்போது கலைச்செல்வியின் சித்தப்பாக்கள் கலியபெருமாள், ரகுபதி, இவரது மகன் ஆனந்த் என்கிற ரகுவரன், கலைச்செல்வியின் தம்பி மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்தனர்.
காதலனுடன் வந்ததால் ஆத்திரத்தில் இருந்த அவர்கள் அரிவாளால் கலைச்செல்வியை வெட்டினார்கள். உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இது குறித்து அரித்துவார மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்–இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கலைச்செல்வியை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர். அவர் நீடாமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற 3பேரை தேடி வருகிறார்கள்.
கலைச்செல்வி அனுமதிக்கப்பட்டு இருந்த தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காதலன் இளையராஜா வந்தார். அவர் காதலி அருகே இருந்து கவனித்து வந்தார். உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர் இன்று காலை ஆஸ்பத்திரியில் கலைச்செல்வி கழுத்தில் தாலி கட்டினார்.
Average Rating