அதிகாரி வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை: உறவினர்களான அக்காள்–தம்பிகள் கைது!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 66). இவர் சோழவந்தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கேசியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். திருமணமாகாதவர்.
இவரது வீட்டின் வெளிக் கதவை உடைக்காமல் உள்கதவை மட்டும் உடைத்து அங்கிருந்த ரூ.44 லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அவரது உத்தரவின்பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) குமரவேல் ஆலோசனையின்பேரில் குற்றவியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், வெங்கடேஷ், ஏட்டுகள் முத்துபாண்டி, விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிருஷ்ணனின் உறவினர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கிருஷ்ணனின் தம்பி சொத்தனின் மனைவி முருகேஸ்வரி(40), அவரது தம்பிகள் கண்ணன் (30), வடிவேல் (30) (சித்தப்பா மகன்) ஆகியோர்தான் திட்டமிட்டு ரூ.44 லட்சத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசில் அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் மூலம் தெரியவந்ததாவது:–
முருகேஸ்வரியின் உடன் பிறந்த சகோதரன் கண்ணனுக்கு ரூ.4 லட்சம் வரை கடன் இருந்துள்ளது. இதனை அடைக்க பணம் தேவைப்பட்டது. அப்போது தான் தனது சகோதரியின் குடும்பத்தாருக்கு சொந்த மான 6 ஏக்கர் தென்னந் தோப்பினை 3 மாதத்திற்கு முன்பு ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்ததும், அதில் அண்ணன், தம்பிக்கு பங்கு பிரித்ததில் கிருஷ்ணனுக்கு ரூ.66 லட்சம் கிடைத்ததும் தெரியவந்தது.
மேலும் அதில் 2½ ஏக்கர் நிலம் வாங்கியது போக மீதம் ரூ.44 லட்சத்தை கறுப்பு பையில் போட்டு ஒரு சாக்கில் கட்டி கிருஷ்ணன் தன் பூர்வீக வீட்டின் உள்அறையில் பூட்டி வைத்து இருப்பதும் தெரியவர, அதனை கொள்ளையடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கிருஷ்ணன் வீட்டு மெயின் சாவி முருகேஸ்வரியிடம் இருந்ததால் அதனை வாங்கி கதவை திறந்து வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டின் உள் அறை கதவை கடப்பாரையால் உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.44 லட்சத்தை கொள்ளையடித்து விட்டனர். போலீசார் விசாரிக்கும்போது வீட்டின் சாவு தொலைந்து விட்டதாக கூறினர். இருப்பினும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.
Average Rating