காதலிக்க மறுத்த பெண் மீது காரை ஏற்றிய காதலன்: காதலி உள்பட 6 பெண்கள் படுகாயம்!!
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள அரிங்கூர் பகுதியை சேர்ந்தவர் சிபின்(வயது21). இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்து இவர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அந்த பெண் சிபினை சந்திப்பதை தவிர்த்தார்.
இதனால் தவித்து போன சிபின் காதலியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் அவருடன் போனிலும் அந்த பெண் பேச மறுத்து விட்டார். பல முறை முயன்றும் காதலியை சிபினால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவருக்கு அந்த பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. தன்னை காதலித்து விட்டு திடீரென புறக்கணித்ததால் அவரை கொல்ல திட்டமிட்டார்.
அதன்படி நேற்று அந்த பெண்ணின் வீட்டு அருகே சிபின் காரில் காத்திருந்தார். அப்போது அவரது காதலி வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார்.
அவரை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு சென்ற சிபின் காரை வேகமாக ஓட்டிச்சென்று அந்த பெண் மீது மோதினார். இதில் அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைப்பார்த்ததும் அந்த வழியாக சென்றுக்கொண்டிருந்த சில பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
இதனால் சிபின் அவர்கள் மீது காரை ஏற்றி விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காப்பாற்ற சென்ற சியாமளா, அமிர்தா, ஜெனியா, பத்மினி உள்பட 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அரிங்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 பெண்களையும் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு காதலியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மற்ற 5 பெண்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி அரிங்கூர் போலீசார் சிபின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிபினின் கார் அந்த பகுதியில் உள்ள காப்பக்காடு என்ற இடத்தில் டயர் பஞ்சர் ஆன நிலையில் நின்றது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சிபினின் காதலி வீட்டில் இந்த காதல் விவகாரம் தெரிந்ததால் அவர்கள் அந்த பெண்ணை கண்டித்து உள்ளனர். இதனால் அவர் சிபினை சந்திப்பதை தவிர்த்து உள்ளார்.
இதனால் அவரை சிபின் தீர்த்து கட்ட முயற்சி செய்து உள்ளார். தலைமறைவாக உள்ள சிபினை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Average Rating