ஸ்ரீரங்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 46 பவுன் நகைகள் கொள்ளை!!
திருச்சி, ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (எ) ராஜேஷ். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 13–ந்தேதி வெங்கட சுப்பிரமணியன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
பின்னர் இன்று காலை ராக்போர்ட் ரெயிலில் திரும்பிய அவர் காலையில் வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற போது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. பெட்ரூமில் உள்ள பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதில் இருந்த 46 பவுன் தங்க நகைகள் கணாமல் போயிருந்தன.
வெங்கட சுப்பிரமணியன் வெளியூருக்கு சென்றதை தெரிந்து கொண்ட ‘மர்ம’ நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் வெங்கட சுப்பிரமணியன் புகார் செய்தார். ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் (பொறுப்பு) செல்லமுத்து, குற்றம் மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் ஜெயந்தி, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கமலகண்ணன், உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டு மாடியில் ஏறிய கொள்ளையர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து தெருவில் ஓடி மீண்டும் வீட்டிற்கே வந்தது. இதனால் வெங்கட சுப்பிரமணியன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து வீட்டில் ஆய்வு நடத்தினர்.
Average Rating