டிரைவரை வழிமறித்து தாக்கி ரூ.25 ஆயிரம் கொள்ளையடித்த 4 போலீசார் கைது!!
மராட்டிய மாநிலத்தில் கார் டிரைவரை வழிமறித்து தாக்கி 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்குள்ள பல்கர் பகுதியில் உள்ள மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை வழியாக கடந்த 18-ம் தேதி மதன்குமார் மஹாட்டோ என்பவர் ஒரு வாடகை காரை ஓட்டிவந்தார். அந்தக் காரை நான்கு பேர் வழிமறித்தனர். தங்களை குற்றப்பிரிவு போலீசார் என்று கூறிக்கொண்ட அவர்கள் மதன்குமார் மஹாட்டோவிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
என்னிடம் பணம் இல்லை என்று அவர் தெரிவித்ததையடுத்து, அவரை அடித்து, உதைத்தனர். அவரது உடைகளை சோதனையிட்டபோது, பாக்கெட்டினுள் ஏ.டி.எம். கார்டு இருப்பதை பார்த்து விட்டனர். உடனடியாக, அவரை மிரட்டி அருகாமையில் இருக்கும் ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு இழுத்துச் சென்றனர்.
அவரை பலவந்தப்படுத்தி ஏ.டி.எம்.மில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை எடுக்கச் செய்து, அந்தப் பணத்தை பறித்துக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இச்சம்பவம் பற்றி அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் மதன்குமார் மஹாட்டோ புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரிடம் வழிப்பறி கொள்ளை நடத்தியது வாசவி காவல் நிலையை எல்லைக்குட்பட்ட போக்குவரத்து போலீசார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் 4 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மதன்குமார் மஹாட்டோ சட்டபுறம்பாக குட்கா கடத்தியதால் அவரை மிரட்டி பணம் பறித்ததாக பிடிபட்ட போலீசார் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
Average Rating