லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை!!
பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது.
இங்கிலாந்தின் பிர்மிங்காம் கவுண்டியில் உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து பொருட்களைத் திருடும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பது வழக்கம்.
கடந்த பிப்ரவரி மாதம் கண்காணிப்பு பணிகளின் போது 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இறைச்சி மற்றும் மதுவை ஒருவர் திருட்டுத்தனமாக எடுத்து தனது பையில் போட்டுக் கொள்வதை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அந்த மனிதரைக் கண்டுபிடித்து விசாரித்த போது, அவர் வருடம் 16 மில்லியன் பவுண்ட் (151 கோடி ரூபாய்) வருவாய் கிடைக்கும் தனியார் நிருவனத்தின் உரிமையாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரோனன் கோஷ் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ரோனன், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிர்மிங்கம் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி எந்த வித பொருளாதார நெருக்கடிகளும் இல்லாத போதும் திருட்டுச்செயலில் ஈடுபட்ட ரோனனுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் 575 பவுன்ட் (54 ஆயிரம் ரூபாய்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
Average Rating