திருவனந்தபுரம் அருகே 2 இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து கற்பழிப்பு: வாலிபர் கைது!!
திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 36). குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி குழந்தையுடன் இவரை பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 23 வயது பெண்ணும், அவரது 17 வயது தங்கையும் அவர்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் அந்த இளம்பெண்கள் செல்போன் வாங்கியதால் அதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் அந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வினோத், அந்த பெண்களிடம் தான் அவர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். வேலை கிடைக்கும் வரை தனது வீட்டில் தங்கி கொள்ளும்படியும் தனது மனைவி அந்த பெண்களை நல்ல முறையில் பார்த்து கொள்வார் என்று அவர்களை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அந்த 2 பெண்களையும் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் வினோத் அடைத்து வைத்து விட்டார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த பெண்கள் கதறி அழுதனர். ஆனால் வினோத் அவர்களை மிரட்டி விட்டு சென்று விட்டார்.
அதன் பிறகு கடந்த ஒரு வாரமாக அந்த 2 பெண்களையும் மிரட்டி வினோத் கற்பழித்துள்ளார். அவர் வெளியில் செல்லும்போது, வீட்டு கதவை பூட்டி விட்டு சென்று விடுவார். பூட்டிய வீட்டுக்குள் இருந்து அந்த இளம்பெண்கள் கூச்சல் போட்டுள்ளனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி நெய்யாற்றின்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பூட்டை உடைத்து அந்த இளம்பெண்களை மீட்டனர். மேலும் நெய்யாற்றின்கரை பஸ் நிலையத்தில் வைத்து வினோத்தையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating