புதுப்பெண் தூக்குப்போட்டு சாவு: மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கைது!!
திருப்பூர் பவானிநகர் 5–வது வீதியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ரேவதிக்கும் (19) கடந்த மாதம் 25–ந்தேதி திருப்பூரில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 20–ந்தேதி இரவு ரேவதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் தங்கவேலு, திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் போலீசார் ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்ட ரேவதியின் உறவினர்கள், ரேவதியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் ரேவதியின் மாமனார், மாமியார் மற்றும் கணவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் மறுநாள் ரேவதியின் உறவினர்களை போலீசார் சமரசம் செய்து அவருடைய உடலை ஒப்படைத்தனர். இதுகுறித்து ரேவதியின் தாயார் முத்துலட்சுமி கொடுத்த புகாரில் மருதுபாண்டியன் கொடுத்த பாலியல் தொல்லையால் தான் எனது மகள் தற்கொலை செய்துள்ளார். அவர் மீதும் அவரது மனைவி கங்கா, மகன் கார்த்திகேயன் அகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆர்.டி.ஓ. மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், ரேவதிக்கு அவருடைய மாமனார் மருதுபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததும், மாமியார் கங்கா அதிக வேலை கொடுத்து கொடுமை படுத்தியதும், இவற்றை ரேவதியின் கணவர் கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து அவரை கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்தனர். மேலும் ரேவதியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் கார்த்திகேயன், மாமனார் மருதுபாண்டியன், மாமியார் கங்கா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் திருப்பூர் 2–வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating