ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை: குடும்ப தகராறில் கணவர் வெறிச்செயல்!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுந்தர பாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் முருகன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணவன்–மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயகலா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ், சப்– இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயகலாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர். மனைவியை கணவன் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating