ஆம்பூரில் ஏ.டி.எம்மில் 200 ரூபாய் எடுத்து கொடுத்து விட்டு 19 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சிறுவன்!!
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிய சிறுவனை ஆம்பூரை சேர்ந்த பெண் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் வசிப்பவர் பராசக்தி (45). தனியார் ஷூ கம்பெனி தொழிலாளி. இவர் கடந்த மார்ச் மாதம் ஆம்பூர் உமர் ரோடில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றார். அவருக்கு பின் நம்பர் போட்டு பணம் எடுக்க தெரியாது. அதனால் யாராவது உதவி செய்வார்களா என சற்றும் முற்றும் பார்த்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் தான் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி கார்டை பயன்படுத்தி அவரிடமிருந்து ரகசிய எண்ணை கேட்டு பதிவு செய்து 200 ரூபாய் பணம் எடுத்து கொடுத்துள்ளான்.
பிறகு ஏடிஎம் கார்டை லாக் செய்ய வேண்டும் என கூறி கார்டை ஏடிஎம்மில் போட்டு எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளான்.
அதன் பிறகு இம்மாதம் தன்னுடைய வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் ரொக்கம் செலுத்தி விட்டு வங்கியிருப்பு குறித்து பராசக்தி கேட்டார். அப்போது கடந்த மாதம் ஏடிஎம்மில் 19 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் 200 ரூபாய் ஏடிஎம்மில் எடுத்த பிறகு 19 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது.
அதாவது அந்த சிறுவன் ஏடிஎம் கார்டை லாக் செய்து கொடுக்கிறேன் என்று கூறி விட்டு கார்டை ஏடிஎம் எந்திரத்தில் போட்டு எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டு உடனடியாக ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை எடுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பணம் எடுக்க வங்கி ஏடிஎம் மையத்ததிற்கு நேற்று வந்தார். அப்போது அதே சிறுவன் அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்த அவர் அச்சிறுவனை பிடித்துக் கொண்டு ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விசாரணையில் சிறுவன் ஆம்பூர் அருகே உள்ள வெங்கிளி கிராமத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.
அந்த சிறுவனுடன் மேலும் சில சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த சிறுவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த சிறுவன் ஏடிஎம் மையத்தில் உதவி செய்வது போல் நடித்து பணம் திருடியிருப்பது ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதை போலீசார் போட்டு பார்த்து உறுதி செய்துள்ளனர்.
இந்த சிறுவர்களுக்கு பின்னால் யாராவது பெரியவர்கள் இருக்கலாம் எனவும், மேலும் பலரிடம் இதேபோல் உதவி செய்வது போல பணம் திருடப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர.
அதனால் அந்த சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating