இலங்கைக்கு இந்தியா ஓசைப்படாமல் ராணுவ உதவி!
“இலங்கைக்கு இந்தியா தார்மீக ஆதரவு தருகிறது’ என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சே கூறுகிறாரே, அதற்கு என்ன பொருள் தெரியுமா? “இலங்கைக்கு இந்தியா, ஓசைப்படாமல் ராணுவ உதவிகளை தருகிறது’ என்பது தான். ஆம்! போர் விமானம் மூலம் புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததை அடுத்து, அதை சமாளிக்க, விமான எதிர்ப்பு பீரங்கிகளை இலங்கைக்கு தந்துள்ளது இந்தியா. “இந்திரா’ என்று பெயரிடப்பட்டுள்ள நவீன ரக ரேடார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வகை ரேடார்கள், தாழப்பறந்து தாக்கும் ஆளில்லா விமானங்களைக்கூட கண்டுபிடிக்கும் திறன் படைத்தவை. “இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவியை செய்யாவிட்டால், சீனாவோ, பாகிஸ்தானோ செய்ய தயாராக உள்ளன. அப்படி அந்த நாடுகள் உதவி செய்ய வழிவிட்டுவிட்டால், அதனால், இந்தியாவுக்கு தான் தலைவலி. எனவே தான், இந்தியாவே, இலங்கைக்கு ஆயுதங்களை சப்ளை செய்கிறது” என்று, ராணுவ தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், விடுதலைப்புலிகளின் ஆயுத கடத்தல் கப்பலில் இருந்து, மிகச்சிறிய விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆளில்லா ரகத்தை சேர்ந்த அந்த விமானங்களில், பயங்கர ஏவுகணை குண்டுகளை வைத்து அனுப்பி, எதிரி இலக்கை தாக்க முடியும். இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் கூறுகையில்,” எங்களுக்கு இந்தியா, ராணுவ உதவியை செய்து வந்தாலும், விடுதலைப்புலிகள், தங்கள் ஆயுதங்களை கடத்த, தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை தடுக்க எங்களால், சரியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என்று கூறினர்.