குடும்பத்துடன் தி.மு.க. பிரமுகர் கொலை: திருப்பூரில் வாலிபர் கைது!!
திருப்பூர் அருகே உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது 55). தி.மு.க. கிளை செயலாளர். லாரி மூலம் தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி சாரதாம்பாள் (50). இவர்களுக்கு நவீந்திரன் (20) என்ற மகனும், ஷோபனா (25) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 5–ந்தேதி இரவு அவரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த ஸ்டாலின் என்ற வாலிபர் சிவசுப்பிரமணியத்தின் மகன் நவீந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி அடித்து கொன்று உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசினார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த சிவசுப்பிரமணியத்தையும் கடுமையாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சிவசுப்பிரமணியம் மயங்கி விழுந்தார். வீட்டுக்குள் சென்ற ஸ்டாலின் அங்கிருந்த சாரதாம்பாளையும், அவரது மகள் ஷோபனாவையும் தாக்கி அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த போது சிவசுப்பிரமணியம், சாரதாம்பாள், ஷோபனா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே சிவசுப்ரமணியம், சாரதாம்பாள் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஷோபனா திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்த திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கொலையாளி ஸ்டாலினை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து ஸ்டாலின் குறித்த நோட்டீஸ் அடித்து பொதுமக்கள் பார்வையில் படும்படி ஒட்டி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் திருப்பூரில் ஒரு ரகசிய இடத்தில் ஸ்டாலின் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பதுங்கி இருந்த ஸ்டாலினை கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் ஸ்டாலின் வேலைக்கு ஒழுங்காக செல்லாததால் சிவசுப்பிரமணியமும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் திட்டம் தீட்டி சம்பவத்தன்று இரவு 3 பேரையும் தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
Average Rating