சீர்காழியில் டாக்டர் இறந்ததாக கூறிய விவசாயி உயிருடன் இருந்ததால் பரபரப்பு!!
சீர்காழி அருகே உள்ள மேலவருவகுடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது 36), விவசாயி. இவர் நேற்று மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே தங்கமணி இறந்துவிட்டதாக கூறியதாக தெரிகிறது. இதனால் உறவினர்கள் தங்கமணியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
வீட்டில் திடீரென தங்கமணி எழுந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தங்கமணியை ஒரு ஆட்டோவில் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது வரும் வழியில் தங்கமணி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தங்கமணியின் உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்தனர். பின்னர் அவர்கள், தங்கமணி இறந்துவிட்டதாக கூறிய டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் சுந்தரவடிவேலு, சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மோகன.அன்பழகன், கவுன்சிலர் முருகன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இறந்துபோன தங்கமணிக்கு நாகலட்சுமி என்கின்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
Average Rating