பீகாரில் மத்திய மந்திரி முன் தற்கொலை செய்ய முயன்ற விவசாயி!!
பீகாரில் மத்திய மந்திரியின் முன் விவசாயி ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலம் பாட்னாவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடம் இருந்து பீகார் மாநில அரசு பெற்றுக்கொண்டது. ஆனால், இதற்கான இழப்பீட்டு தொகையை அரசு முறையாக வழங்கவில்லை. இதனை கண்டித்து பாட்னாவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீட்டா என்ற பகுதியில் விவசாயிகள் கடந்த 7 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மத்திய இணை மந்திரி ராம் கிருபால் யாதவ் பீட்டா பகுதிக்கு சென்றார். அங்கு விவசாயிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு விவசாயி திடீரென அருகில் இருந்த மரத்தில் ஏறி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அங்கு கூடியிருந்தவர்கள் விரைவாக செயல்பட்டு அவரை காப்பாற்றினர். பின்னர் விவசாயிகளின் இழப்பீடு குறித்து மந்திரி யாதவ், பாட்னா மாவட்ட கலெக்டர் அபய்குமார் சிங்கிடம் பேசினார். அப்போது, மாவட்ட நிர்வாகம் மூலம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை அளிக்கப்படும் என்று மத்திய மந்திரியிடம் கலெக்டர் உறுதியளித்தார்.
Average Rating