ஐரோப்பாவின் அதிபர் பதவிக்கு பிளேர் நிறுத்தம்?
ஐரோப்பிய யூனியன் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அதிபர் பதவிக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோணி பிளேர் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் புதிதாக ஐரோப்பிய அதிபர் என்ற புதிய பதவியை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பதவிக்கு இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோணி பிளேர் நிறுத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் தலைவர்களில் பெரும்பாலானோர் பிளேருக்கு ஆதரவாக உள்ளனர். பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கூறுகையில், பிளேர் மிகவும் குறிப்பிடத்தக்க நபர் என்று கூறி அவரை அதிபர் பதவிக்கு நிறுத்தலாம் என பரிந்துரைத்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் தற்போது உள்ள தலைவர் பதவி சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதம் வரை தலைவர் பதவியின் பதவிக்காலம் உள்ளது. தற்போது இதை மாற்றி புதிதாக அதிபர் பதவியை உருவாக்கி, இரண்டரை காலம் அந்தப் பதவியின் ஆயுட்காலத்தை நீட்டித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குத்தான் தற்போது பிளேர் நிறுத்தப்படவுள்ளார். இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனும், பிளேருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் பதவிக்கு பிளேர் மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் புதிய பதவிக்கான ஒப்புதலை இன்னும் ஐரோப்பிய யூனியன் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. அதன் பின்னரே பிளேர் அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.
இருப்பினும் பிளேருக்கு ஒரு தரப்பு ஆதரவு தராது என்ற கருத்தும் நிலவுகிறது. ஈராக்கில் அமெரிக்கா ஊடுறுவியபோது, அதை எதிர்த்த ஐரோப்பிய நாடுகளைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தவர் பிளேர் என்ற கரும்புள்ளி பிளேர் மீது இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதவிக்கு பிளேர் தவிர, போலந்து முன்னாள் அதிபர் அலெக்சாண்டர் வாசினெவ்ஸ்கி மற்றும் அயர்லாந்து பிரதமர் பெர்டி அஹெர்ன் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.