திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற அபூர்வ புதுப்பெண்!!
கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமணப்பெண் புதிய செய்தியையும் கூடவே ஒரு மெஸேஜையும் அளித்துள்ளார்.
இங்குள்ள அகோலா மாவட்டம், அண்டுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணான சைட்டால்லி கலாக்கே என்பவருக்கும், யவடாமால் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரா மக்கோடே என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண தேதிக்கு ஒருவாரம் முன்னதாக கணவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட மணப்பெண் தனக்கு சீதனமாக தரும் தங்க நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் ஒரு ஆயத்த கழிப்பறையையும் (ரெடிமேட் டாய்லட்) வாங்கித்தரும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார்.
அவர்களும் அதற்கு சம்மதிக்க, தண்ணீர் தொட்டி, வாஷ் பேசின் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியுடன் வடிவமைக்கப்பட்ட ஆயத்த கழிப்பறையை சீதனமாக புகுந்தவீட்டுக்கு கொண்டுசென்ற அந்த அபூர்வ புதுப்பெண்ணை தேவேந்திரா மக்கோடே வாழும் கிராமத்தை சேர்ந்த மக்கள் புதுமையாக பார்த்து, ஆச்சரியப்பட்டனர்.
திருமண சீதனமாக கொடுக்கும் அனைத்து பொருட்களை விடவும் இந்த ஆயத்த கழிப்பறை மிகவும் பயனுள்ளது என்று கூறிய சைட்டால்லி கலாக்கேவின் விளக்கத்தை கேட்ட அவர்கள் வாயடைத்து நின்றனர்.
Average Rating