மாணவர்கள் உட்கொண்ட உணவு விஷமாகி ஒருவர் மரணம்; நால்வர் ஆபத்தான நிலையில்
நமுனுகலைப் பகுதியைச் சேர்ந்த பள்ளக்கட்டுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் மாணவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாகியதால் ஒரு மாணவன் மரணமானதுடன், மேலும் நான்கு மாணவர்கள் பதுளை அரசினர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை பள்ளக்கட்டுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக வகுப்புகளுக்கு சென்ற இம் மாணவர்கள், அங்கு உணவு உண்டதையடுத்து, திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்ததையடுத்து உடனடியாக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டனர். அங்கு இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஏனைய நான்கு மாணவர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக பதுளை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பள்ளக்கட்டுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்ற எட்டு வயது மாணவனே உயிரிழந்துள்ளான். இம் மாணவர்கள் பள்ளக்கட்டுவை வித்தியாலயத்தில் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.