திருப்பதி அருகே ஓயாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய்!!
திருப்பதி அருகே உள்ள போரூர் வித்யா நகரைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மனைவி கரிஷ்மா. இவர்களுக்கு 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரபாஸ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தை உருண்டு விழுந்தது. இதனால் ஏற்பட்ட வலியால் குழந்தை வீறிட்டு அழுதது. விடாமல் தொடர்ந்து கதறி அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த தாய் கரிஷ்மா குழந்தையின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி விழுந்தது. காதில் இருந்தும், வாயில் இருந்தும் ரத்தம் வழிந்த நிலையில் குழந்தை பிரபாஸ் பரிதாபமாக இறந்தது.
இது தொடர்பாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் கரிஷ்மாவை போலீசார் கைது செய்தனர்.
கரிஷ்மா கூறும்போது, ‘‘அதிக சத்தம் கேட்டால் எனக்கு தலைவலி வரும். குழந்தை விடாமல் கத்தி அழுதது. அதனால் அவனை அடித்தேன். கொலை செய்யும் நோக்கத்தில் அடிக்கவில்லை’’ என்று சர்வ சாதாரணமாக தெரிவித்தார்.
தாய் அடித்ததில் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating