உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியை அகற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை!!
உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியாக கருதப்படும் 5 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த தாஸ்(66) என்பவரது வயிற்றின் உள்ளே வலதுபுறத்தில் கட்டி போன்ற தசை உருவாகி, கடுமையான வலியும், சுவாசிக்க முடியாத கோளாறும் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
தாசை பரிசோதித்த டாக்டர்கள் அவரது சிறுநீரகத்தில் புற்றுக்கட்டி உண்டாகியிருப்பதால் வழக்கமான அளவை விட அவரது சிறுநீரகம் 35 மடங்கு வீங்கிப் போய் இருப்பதை கண்டுபிடித்தனர். சிறுநீரகத்தில் உள்ள புற்றுக்கட்டி பரவி நுரையீரலையும் பாதித்ததால் அந்த நோயாளிக்கு சுவாசக் கோளாறும் ஏற்பட்டுள்ளதை அறிந்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்து கட்டியை அகற்ற தீர்மானித்தனர்.
கடந்த 14-ம் தேதி அவருக்கு செய்யப்பட்ட ஆபரேஷனில் மார்புப் பகுதியில் இருந்து அடிவயிறு வரை 25 செண்டிமீட்டர் நீளத்துக்கு கீறல் போட்டு, மார்பு எலும்புகளில் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டது. உடலுக்கு தேவையான ரத்தம் மற்றும் உணவு சுழற்சியை மேற்கொள்ளும் மிக முக்கிய நாளத்தை அழுத்தியவாறு வளர்ந்திருந்த அந்த புற்றுக்கட்டியை சுமார் ஐந்தரை மணிநேர ஆபரேஷனுக்கு பின்னர் டாக்டர்கள் வெற்றிகரமாக நீக்கினர்.
அந்த புற்றுக்கட்டி 5 கிலோ 18 கிராம் எடை இருந்ததாக தெரிவித்துள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், உலக மருத்துவ வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய புற்றுக்கட்டி சிறுநீரகத்தில் இருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆபரேஷனுக்கு பின்னர் ஒருநாள் மட்டும் தீவிர சிகிச்சைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அந்த நோயாளி, மறுநாளே பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, தற்போது குணமடைந்து வருவதாகவும் அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating