திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல்!!
திருப்பதி, திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களிடம் திருடர்கள் பலர் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக திருப்பதி, திருமலை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதன்பேரில் மத்திய குற்றத்தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருடர்களைத் தேடி வந்தனர்.
அப்போது திருமலையில் சுற்றித்திரிந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் நாகராஜு, கோவிந்து, சீனிவாசலு, சுப்பிரமணியம், மகேந்திரா, கோபி என்றும், நகரி மண்டலம் ஒய்.ஜி.குப்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. அவர்கள் கூட்டாக சேர்ந்து திருமலை, திருப்பதி பகுதியில் பக்தர்களிடம் தங்கச் சங்கிலிகள் திருடுவது, கைப்பைகளை பறித்து செல்வது போன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பழைய திருடர்கள் என தெரிய வந்தது.
இதையடுத்து மேற்கண்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது திருமலையில் 7 புகார்களும், திருப்பதி கிழக்கு போலீசில் 7 புகார்களும், அலிபிரியில் ஒரு புகாரும் உள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பக்தர்களிடம் கைவரிசை காட்டியதாக கர்னூல் மாவட்டம் ஆத்மக்கூர் மண்டலம் சித்தாபுரம் கிராமத்தை சேர்ந்த கோவர்தன், வெங்கடரமணம்மாள், வாணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Average Rating