கென்ய நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களில் தேர்தல்
கென்யாவின் அடுத்த நாடாளுமன்றத்தேர்தல்கள் நடப்பதற்கு வழிசெய்யும் முகமாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கென்ய அதிபர் ம்வாய் கிபேகி அவர்கள் இன்று கலைத்திருக்கிறார். மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விடயம் இப்போது நடந்திருப்பதன் மூலம், அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்கள் அடுத்த 90 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கென்யாவின் பொருளாதாரம் குறித்து கிபேகி அவர்கள் தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்திய போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நாடாளுமன்றம் முக்கியமான மசோதாக்களை விவாதிக்க தவறிவிட்டதாகவும், அதேசமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வளிக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் விமர்சனத்திற் குள்ளாகியிருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் கிபேகி அவர்கள் இரண்டாவது முறையாக அதிபர் பதவியில் நீடிக்க முயல்கிறார். இவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் இரண்டுபேர் களத்தில் நிற்கிறார்கள். கென்யாவின் வரலாற்றில் இந்த தேர்தலில் போட்டி மிகக் கடுமையாக இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.