போலீஸில் துப்பாக்கியை ஒப்படைத்த சிரஞ்சீவி தம்பி
சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு எங்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது. அவரை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாணம் கூறியுள்ளார். மேலும் தனது துப்பாக்கியையும், போலீஸில் அவர் ஒப்படைத்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா, வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரீஷ் பரத்வாஜை சமீபத்தில் ரகசியத் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் தலைமறைவாகி விட்டார்கள். ஸ்ரீஜாவின் இந்த அதிரடிக் கல்யாணத்தால் ஆந்திராவே பரபரப்பாகிக் கிடக்கிறது. சிரஞ்சீவியின் வீட்டுக்கு தினசரி பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் திடீரென ஸ்ரீஜாவும், பரத்வாஜும் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி நடிகர் சிரஞ்சீவிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. எனவே காதல் தம்பதியினர் டெல்லியில்தான் தங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இன்னொரு திருப்பமாக, சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணம், சினிமாவில் வருவது போல உடலில் பெரிய துண்டைப் போர்த்தியபடி, கையில் துப்பாக்கியுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் வருவதை அறிந்ததும் நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிந்து விட்டனர்.
காவல் நிலையத்திற்குப் போய் விட்டுத் திரும்பிய பவன் கல்யாண் கூறுகையில், எங்களால் ஸ்ரீஜாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறார்கள், பேசுகிறார்கள். நாங்கள் ஏன் அவரை மிரட்ட வேண்டும், கொல்ல முயற்சிக்க வேண்டும். அதற்கு என்ன அவசியம் உள்ளது.
என்னிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பதால்தான் இவ்வாறு கூறுகிறார்களா என்று தெரியவில்லை. அதனால்தான் துப்பாக்கியை போலீஸில் ஒப்படைக்க வந்தேன். ஒப்படைத்து விட்டேன்.
எனது அண்ணன் அவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார். எனவே அவர்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்.
அவர்களைத் தேடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. காவல்துறைக்கும், எங்களுக்கும் பல வேலைகள் உள்ளன. அதை நாங்கள் பார்க்க வேண்டும். எங்களின் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார் பவன் கல்யாண்.
பவன் கல்யாண் இப்படிக் கூறினாலும் கூட, சிரஞ்சீவி தரப்பிலிருந்து ஒரு படையே, ஸ்ரீஜா, பரத்வாஜ் இருப்பிடத்தை படு தீவிரமாக தேடி வருவதாக ஆந்திராவில் பரபரப்பாக பேசப்படுகிறது.