கீழக்கரை வங்கியில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது!!
கீழக்கரை அருகே உள்ள மாயா குளத்தை சேர்ந்தவர் சகுபான்பீவி (வயது 30). இவர் அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நகைக்கடன் பெற்றிருந்தார். அடகுவைத்த நகையை திருப்புவதற்காக நேற்று வங்கிக்கு சென்ற சகுபான் பீவி, காசாளரிடம் பணம் செலுத்தினார். அந்த பணத்தில் 4 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வங்கி மேலாளர், கீழக்கரை போலீசில் புகார் செய்தார். சகுபான் பீவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரையை சேர்ந்த முகமது காசிம் என்பவரது மகன் முகமது பாசித்திடம் பணம் பெற்றதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சப்–இன்ஸ்பெக்டர் சிவ சுப்பிரமணியம் ஆகியோர் முகமது பாசித்தை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சகுபான் பீவியிடம் அவர், கள்ள நோட்டுகளை கொடுத்தது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த கள்ளநோட்டு புழக்கத்தில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்பதாக தெரிய வருவதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ள நோட்டுகள் பிடிபட்டதை தொடர்ந்து வர்த்தகர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு, ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்கு தயங்கி வருகின்றனர்.
Average Rating