பதுளை உணவக ஊழியர் கொலை: மைத்துணர் இருவர் கைது
பதுளை உணவகமொன்றின் ஊழியரொருவர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, கொலையுண்டவரின் மைத்துணர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில், பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளையைச் சேர்ந்த பி. எம். ஜயரட்ண என்ற 47 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தந்தையே கொலையுண்டவராவார். இக்கொலைச் சம்பவம் நேற்றுமுந்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. பதுளை உணவகமொன்றி;ன் ஊழியராகக் கடமையாற்றிவந்த ஜயரட்ண இரவு வீடு திரும்பும் போது மறைந்திருந்த சிலரினால் தடிகளினால் தாக்கப்பட்டும், கத்தியினால் குத்தப்பட்டும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். கொலையுண்டவரின் முதல் மனைவிக்கு 3 பிள்ளைகளும், இரண்டாவது மனைவிக்கு 4 பிள்ளைகளுமாக ஏழு பிள்ளைகள் உள்ளனர். கொலையுண்டவரின் முதல் மனைவியைக் கைவிட்டுவிட்டு இரண்டாவது மனைவியுடனே இந்நபர் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் முதல் மனைவியின் சகோதரர்கள் இருவருக்கும் கொலையுண்டவருக்குமிடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டு வந்துள்ளதும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொலைக்கு மேற்படி இரு நபர்களுமே காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில், கொலையுண்டவரின் மைத்துணர்கள் இருவரும் பதுளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.