சல்மான் கானுக்கு எதிரான வழக்கு ஆவணங்கள் அரசிடம் இல்லை!!
காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில், ஹிந்தி நடிகர் சல்மான்கானுக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தீ விபத்தில் மகாராஷ்டிர அரசு இழந்து விட்டது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசின் சட்டம், நீதித்துறை அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சல்மான் கானுக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்கள், வழக்குக்கான அரசு செலவினம், வழக்குரைஞர் விவரங்கள் உள்ளிட்டவற்றை மன்சூர் தர்வேஷ் என்பவர் கேட்டிருந்தார்.
அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:
மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி நேரிட்ட தீ விபத்தில், சல்மான் கான் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் எரிந்து விட்டன. இந்த வழக்குக்காக சிறப்பு வழக்குரைஞராக பிரதீப் காரத் என்பவரை மகாராஷ்டிர அரசு நியமித்தது.
அவருக்கு கடந்த 2002ஆம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் வரையிலும், ஒவ்வொரு வழக்கு விசாரணைக்கும் தலா ரூ. 6,000 வீதம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு காரை வேகமாக ஓட்டிவந்து நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான்கானுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கியதுடன், இதுதொடர்பான விசாரணை நிறைவடையும் வரையில் அவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.
Average Rating