இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்வு: ஆய்வில் தகவல்!!
உலக அளவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகி விட்டது. இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் புகை பிடிக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த 2005–06ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 11 தசவீதம் பெண்கள் புகை பிடிப்பது தெரிய வந்தது.
இவர்களில் பாதி பேர் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெளி இடங்களில் வைத்து புகை பிடிப்பதாக கூறியிருந்தனர். புகை பிடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது நன்கு தெரிந்திருந்தும் புகை பிடிப்பதாக அவர்கள் கூறியதாக ஆய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்திய இளம் பெண்களிடம் பரவி வரும் புகை பிடிக்கும் மோகத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
சமீபத்தில் எடுத்த புதிய கருத்துக்கணிப்பில், இந்திய பெண்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சோனாலி, ‘‘புகை பிடிப்பதால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது’’ என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் மற்றொரு டாக்டரான சுதீர் கண்டேல்வால் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் பெண்களுக்கு நுரையீரல் புற்று நோய் என்பதே இருக்காது. அது போல மாரடைப்பால் பெண்கள் உயிரிழப்பதாக கேள்விப்பட இயலாது.
ஆனால் இப்போது நிறைய பெண்கள் நுரையீரல் புற்று நோய் பாதிப்புடன் வருகிறார்கள். தீவிரமாக விசாரித்தால் அவர்கள் புகை பிடித்தது தெரிய வந்தது’’ என்றார்.
இந்தியாவில் புற்று நோய் பாதிப்பால் உயிரிழக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் நுரையீரல் புற்றுநோய் பாதித்து உயிரிழப்பவர்களாக உள்ளனர்.
இந்திய பெண்களில் கடந்த 5 வருடங்களில் கல்லூரி படிப்புக்கு வந்துள்ள இளம் பெண்கள்தான் அதிகமாக புகை பிடிப்பதாக ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து அவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
புகை பிடிக்கும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தைகளே பிறக்கும். சில பெண்களுக்கு முழு வளர்ச்சி அடையாத குழந்தை பிறக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Average Rating