ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறைகளில் அனாதையாக கிடந்த 4 கிலோ தங்கம் ஐதராபாத்தில் சிக்கியது!!
வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மஸ்கட்டில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது. இதையொட்டி, ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.30 மனியளவில் அந்த விமானம் தரையிறங்கியபோது விமானத்துக்குள் நுழைந்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த விமானத்தின் வால்பகுதியில் உள்ள இரு கழிப்பறைகளில் கேட்பாரற்று கிடந்த தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்கக்கட்டிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த தங்கத்துக்கு அந்த விமானத்தில் வந்த பயணிகளில் யாரும் உரிமை கோராததால் அவற்றை அதிகாரிகள் கைப்பறினர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை சுமார் 4 கிலோ என்றும், இதன் உள்நாட்டு சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating