17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வெயிலினால் அதிகம் பேர் இறப்பு!!
இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் வெயிலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் 1636 பேரும், தெலுங்கானாவில் 546 பேரும் இறந்துள்ளனர். இன்னும் சில நாட்கள் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் 1998–ல் இதேபோல வெயில் அதிகமாக இருந்தது. அப்போது 2541 பேர் உயிரிழந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் 2003–ம் ஆண்டு ஐரோப்பாவில் கடும் வெயிலினால் 71 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்தனர். 2010–ம் ஆண்டு ரஷ்யாவில் கடும் வெயிலினால் 55 ஆயிரத்து 736 பேர் உயிரிழந்தனர். 2006–ம் ஆண்டு ஐரோப்பாவில் 3 ஆயிரத்து 418 பேர் உயிரிழந்தனர். இதன்படி உலக அளவில் இந்த ஆண்டு இந்தியாவில் வெயிலினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 5–வது இடத்தை பிடித்துள்ளது.
அதேபோல 2003–ம் ஆண்டு ஏற்பட்ட வெயிலினால் 1210 பேரும், 2002–ம் ஆண்டில் 1030 பேரும் உயிரிழந்தது குறிப்பிட தக்கது.
இந்தியாவில் 10 தடவை நடந்த அதிக உயிரிழப்புகளில் 6 சம்பவங்கள் 21–ம் நூற்றாண்டிலேயே நடந்துள்ளது. அதிகமாக வெயிலடிப்பதற்கு உலக வெப்பமயமாதலே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இன்னும் வருங்காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று மும்பை ஐ.ஐ.டி., ஆஸ்திரேலியாவின் மொனாஸ் பல்கலைக்கழகம் ஆகியவை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Average Rating