8.1 அடி உயரத்துடன் சாதனை புரிந்த இந்தியாவின் உயரமான மனிதர் அனுபவிக்கும் சோதனைகள்!!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வரும் 32 வயதான தர்மேந்திர சிங், 8 அடி ஒரு அங்குல உயரத்துடன், இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். இருந்தாலும் இந்த உயரத்தினால் அவர் அனுபவித்த சோதனைகளே அதிகம்.
வேலை, திருமணம் இரண்டிலுமே அவருக்குமே உயரம்தான் பெரும் பிரச்சனை. இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் தர்மேந்திர சிங், செல்லும் அனைத்து நேர்முகத்தேர்விலும் சொல்லி வைத்தது போல் ”இவ்வளவு உயரமாக இருந்தால் எப்படி வேலை செய்வீர்கள்?” என்று கூறி வேலை தராமல் திருப்பி அனுப்பி விடுவார்கள்.
இதனால் உள்ளூரில் உள்ள கேளிக்கை பூங்காவில் நையாண்டி நிகழ்ச்சி நடத்தி வரும் சிங்குடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் 10 ரூபாய் தருவார்கள். அதை வைத்தே தன் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை சிரமப்பட்டு பூர்த்தி செய்து வருகிறார். சில நேரங்களில் அதையும் கூட தராமல் மக்கள் ஓடி விடுவதாக, வருத்ததுடன் கூறுகிறார் சிங்.
சிறு வயதிலேயே ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்ற பட்டைப்பெயர்களால் அழைக்கப்பட்டு பலரின் கேலி கிண்டலுக்கு ஆளான சிங், தற்போது சரிவர நடக்க முடியாமல் அவதிப்படுகிறார். காரணம் அதிக உயரம் காரணமாக சில மாதங்களுக்கு முன் அவரது இடுப்பு எலும்பு முறிந்துள்ளது.
நிரந்தர வருமானம் இல்லாதது ஒருபுறம் என்றால் திருமணத்திற்கு சிங்கின் அளவிற்கு உயரமான பெண்ணை எங்கு போய் தேடுவது. இவ்வளவு சோதனைகள் இருந்தாலும், ”என் கூட எல்லாரும் போட்டோ எடுத்துக்க ஆசைப்படும் போது, நான் என்னை ஒரு பிரபலமா உணர்கிறேன்” என்று கூறி தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டு சிரிக்கும் சிங், உண்மையிலேயே இந்தியாவின் உயர்ந்த மனிதர்தான்.
Average Rating