கடத்தப்பட்ட சிறுமி சமூக வலைதள உதவியால் மீட்பு: குற்றவாளியை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார்!!
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ரியா கடந்த 28-ந்தேதி மர்ம ஆசாமி ஒருவரால் கடத்தப்பட்டாள். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பந்த்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சிறுமி கடத்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமி ரியாவை வாலிபர் ஒருவர் தூக்கிச்செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது.
போலீஸ் விசாரணையில் சிறுமியை கடத்தியது அங்கு தச்சு வேலை செய்து வந்த ராம்பிலால் பிரஜாபதி(வயது24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ராம்பிலால் பிரஜாபதியை பிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த அவரது படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்தநிலையில், ஜூபேர் தம்போலி என்ற போக்குவரத்து போலீஸ்காரர் நேற்று தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சாலையில் பணியில் இருந்தபோது, தனக்கு வாட்ஸ்அப்பில் வந்திருந்த படத்தில் இருந்த ராம்பிலால் பிரஜாபதி அங்கு சிறுமியுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அவர் ராம்பிலால் பிரஜாபதியை மடக்கி பிடித்தார். மேலும் அவரிடம் இருந்த சிறுமியையும் மீட்டார். பின்னர் அவர் உடனடியாக இது பற்றி பந்த் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று ராம்பிலால் பிரஜாபதியை கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமி ரியாவை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை என்ன காரணத்திற்காக ராம்பிலால் பிரஜாபதி கடத்தினார் என்பதை கண்டறிய அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating