கொழிஞ்சாம்பாறை அருகே மகனை வெட்டி கொன்ற தந்தை!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ளது பனையூர் அத்திக்கோடு. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 67). மரக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சத்தியபாமா (61). இவர்களது மகன் பிரவீன் (34). பிரவீனுக்கு வனிதா (31) என்ற மனைவி உள்ளார். கடந்த 1½ வருடத்துக்கு முன்பு சொத்துப்பிரச்சினை காரணமாக ஸ்ரீதரன் வீட்டை விட்டு வெளியேறி வேலை செய்யும் மரக்கடையிலேயே தங்கினார்.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஸ்ரீதரன் வீட்டுக்கு வந்தார். அப்போது மருமகள் வனிதா குளித்துக்கொண்டிருந்தார். மனைவி சத்தியபாமா சமைத்துக்கொண்டிருந்தார். மகன் பிரவீன் படுக்கை அறையில் தூங்கினார்.
படுக்கை அறைக்கு சென்ற ஸ்ரீதரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகனை சரமாரியாக வெட்டினார். பிரவீன் அலறி சத்தம் போட்டார். பிரவீனின் அலறல் சத்தம் கேட்டு சத்தியபாமா, வனிதா ஆகியோர் ஓடி வந்தனர். அவர்களையும் ஸ்ரீதரன் வெட்டினார். பலத்த வெட்டுக்காயங்களுடன் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் அலறினர்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடிவருவதை பார்த்த ஸ்ரீதரன் அங்கிருந்து தப்பினார். அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிரவீன் இறந்து கிடந்தார். சத்தியபாமா, வனிதா ஆகியோர் உயிருக்கு போராடினர்.
இது குறித்து சித்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரையும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பிரவீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சத்தியபாமாவுக்கும், வனிதாவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீதரனை தேடி வந்தனர். மாலை 6 மணியளவில் வீட்டருகே உள்ள புதரில் ஸ்ரீதரன் வயிறு அறுபட்ட நிலையில் மயங்கி கிடந்தார். ஸ்ரீதரனை மீட்ட போலீசார் அவரையும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சொத்து பிரச்சினை காரணமாக ஸ்ரீதரன் மனைவி, மகன் மற்றும் மருமகளை கொலை செய்யும் நோக்கில் வெட்டியுள்ளார். அதில் மகன் மட்டும் இறந்தார் மற்றவர்கள் தப்பினர். 3 பேரும் இறந்திருப்பார்கள் என்று நம்பிய ஸ்ரீதரன் தற்கொலை செய்யும் நோக்கியில் தனது வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவருகிறது என்று கூறினர்.
Average Rating