மதுரவாயலில் பூட்டிய வீட்டில் 2 குழந்தைகள் கொலை: தந்தை மாயமானதால் பரபரப்பு!!
மதுரவாயலை அடுத்த எம்.எம்.டி.ஏ. காலனி செக்டார் 1 வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வக்கீல் ரவி. இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது14). மகன் பிரபு (வயது12).
பிரியதர்ஷினி அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பும், பிரபு 6–ம் வகுப்பும் படித்து வந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மகேஷ்வரி பிரிந்து சென்றுவிட்டார். ரவி தனது மகள், மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த வாரம் ரவி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து பூட்டிக் கிடந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கையறையில் பிரியதர்ஷினியும், பிரபுவும் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
அவர்களது கழுத்தின் பின் பகுதி அறுக்கப்பட்டு இருந்தது. அறையின் டி.வி.யும், ஏ.சி.யும் இயங்கியப்படி இருந்தது. போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரவி எங்கு சென்றார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அவர் மாயமாகி இருப்பதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவரது செல்போன் நம்பரில் இருந்து கடைசியாக யாரிடம் பேசப்பட்டது என்று விசாரித்து வருகிறார்கள். ரவி சிக்கினால்தான் குழந்தைகள் கொலை செய்யப்பட்டது எதற்காக? குடும்பத்தகராறு காரணமா? அல்லது வேறு எதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரிய வரும்.
பூட்டிய வீட்டிற்குள் 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating