ராயப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!
சென்னை ராயப்பேட்டை முத்துரா பேகம் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் தொழில் அதிபர். இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டி விட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வெளியில் சென்றார்.
இதன் பின்னர் பட்டப்பகலில் ஒரு ஆட்டோவில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், சீனிவாசனின் வீட்டுக்கு வந்தது. பின்னர் அவர்கள் பரபரப்பான காலை வேலையிலேயே மிகவும் துணிச்சலாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர்.
வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் இப்பொருட்களை மூட்டை கட்டிய கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக வெளியில் வந்து தாங்கள் வந்த ஆட்டோவிலேயே தப்பிச்சென்றனர். மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு வந்த சீனிவாசன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகளையும் கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். சீனிவாசனின் வீடு இருக்கும் முத்துரா பேகம் சாலையில் அப்பகுதியில் வசிப்பவர்களே ஒன்றாக சேர்ந்து கேமராக்களை வாங்கி பொறுத்தியுள்ளனர். அதனை போலீசார் போட்டு பார்த்தனர். அப்போது கொள்ளையர்களின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கேமராவில் சிக்கி இருக்கும் கொள்ளையர்களின் உருவத்தை தனித்தனி போட்டோக்களாக பிரிண்ட் போட்டு பார்க்கவும் போலீசார் முடிவு செய்தனர். இதன் பின்னர் பழைய குற்றவாளிகளின் போட்டோக்களோடு அதனை ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.
இதில் போலீசுக்கு சிக்கலும் இருக்கிறது. ஏனென்றால் கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவம் தெளிவாக இல்லை. இதனால் கம்ப்யூட்டரின் உதவியுடன் அதனை தெளிவாக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் முடிந்த பின்னர் ஆட்டோவில் வந்து துணிச்சலுடன் கொள்ளையடித்துச்சென்ற கொள்ளையர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
சீனிவாசன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள் திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டிருப்பதால் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர்தான் கொள்ளை யடித்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களின் பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
Average Rating