வேகம் பிடிக்கும் சதாப்தி ரயில்கள்!
சதாப்தி ரயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி – ஆக்ரா இடையிலான போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி – கான்பூர் இடையிலான லக்னோ சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், வேகத்தை அதிகரிப்பதற்கான முன்னோட்டமாக, ரயில் பாதைகளை பலப்படுத்துவது, சிக்னல்களை சீரமைப்பது, பிற ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம். டெல்லி – கான்பூர் இடையிலான ரயில் பாதையில் சில இடங்கள் ரயிலின் வேகத்தைத் தாக்குப் பிடிக்குமா என்ற சந்தேகம் உள்ளதால் அங்கு பாதுகாப்பு கருதி ரயில் பாதையையொட்டி பலமான சுவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
டெல்லி – ஆக்ரா இடையே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
இதேபோல முக்கிய நகரங்களை இணைக்கும் பிற சதாப்தி மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்களின் வேகத்தை அதிகரித்த பின்னர் பிற ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
இந்தியாவில் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இந்த ரயிலை கொண்டு வர வேண்டுமானால், ஒரு பிரிவுக்கு ரயில் பாதை போட மற்றும் பிற பணிகளை மேற்ெகாள்ள ரூ. 40,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே புல்லட் ரயில் திட்டம் ரயில்வே துறையின் முன்னுரிமைத் திட்டப் பட்டியலில் இதுவரை இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.