போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டு வாழ்க்கையை சீரழித்து விடுகிறது: 5 பேரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாவது போல், போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டும் வாழ்க்கையை சீரழித்துவிடுகிறது என கருத்து தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், 16 வருடங்களுக்கு முன் கற்பழிப்பு குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற 5 பேரை விடுவித்து இன்று உத்தரவிட்டது.
வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்டானி மற்றும் சங்கீதா திங்ரா செகல் ஆகியோர் கூறுகையில், கற்பழிப்பால் பாதிக்கப்படுபவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயம் போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டும் குற்றம் சாட்டப்பட்டவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடும் என்று தெரிவித்தனர்.
கற்பழிப்பு புகார் தொடர்பாக அப்பெண் அளித்த வாக்குமூலத்தில், வேறுபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான 5 பேரில் முதல் குற்றவாளியான பிரவீனுடன் அப்பெண்ணுக்கு தொடர்பு உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவ, விஞ்ஞான மற்றும் வல்லுனர்கள் வழங்கிய அறிக்கைகளுக்கும், அப்பெண்ணின் வாக்குமூலத்துக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக கடந்த 1994 ஆம் ஆண்டு அப்பெண் அளித்த புகாரில், பிரவீனும் தானும் நண்பர்களாக இருந்த நிலையில், ஒரு நாள் தன்னை பிரவீன் அவரது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கற்பழித்தாகவும், பின்னர் பிரவீனின் நண்பர் பிட்டோ தன்னை கற்பழித்ததை பிரவீன் வீடியோவில் படமெடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் தொடர்ந்து பிரவீனின் நண்பர்கள் பலராலும் தான் கற்பழிக்கப்பட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரவீன் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
முடிவில் ஐந்து பேருக்கும் தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்த முதல் குற்றவாளியான பிரவீன், புகார் கூறியுள்ள பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்ததால், அப்பெண்ணை திருமணம் செய்ய, தான் மறுத்துவிட்டதாகவும், இதனால் தன்னை பழிவாங்கும் நோக்கில் கற்பழிப்பு புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையின் முடிவில் தான் டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கண்ட பரபரப்பு தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Average Rating