குரும்பூர் அருகே பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்துக்கொன்ற வியாபாரி!!
தூத்துக்குடிமாவட்டம் குரும்பூர் அருகே உள்ள புறையூரை சேர்ந்தவர் ராமஜெயம். இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் தனலட்சுமி வீட்டிற்குள் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தனலட்சுமி இறந்தார். இது குறித்து குரும்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனலட்சுமியை அவரது கணவர் ராமஜெயம் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனலட்சுமி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:–
ராமஜெயம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் முட்டை வியாபாரம் செய்து வந்தார். இதனால் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக தனலட்சுமிக்கு பேச்சு திறனில் குறைபாடு ஏற்பட்டது. அங்குள்ள டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவரது உறவினர்கள் குரும்பூருக்கு வருமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து ராமஜெயம், மனைவி, குழந்தைகளுடன் புறையூருக்கு வந்துவிட்டார். அங்கு வந்ததும் இடையன்விளையில் உள்ள ஒரு மந்திரவாதியிடம் சென்று காண்பித்தார். அந்த மந்திரவாதி ரூ.7500 பணம் தந்தால் தனலட்சுமியின் பேச்சுத்திறன் குறைபாட்டை நீக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதனை ராமஜெயம் நம்பவில்லை. மேலும் மனைவியிடம் டாக்டர்களிடமே காண்பிப்போம் என்றும், பெல்லாரிக்கு உடனே புறப்பட்டு செல்வோம் என்றும் கூறியுள்ளார். ஆனால் தனலட்சுமி இதற்கு மறுத்துவிட்டார். மந்திரவாதியிடமே காண்பிப்போம் என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராமஜெயம், தனலட்சுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டார். இதில் அவர் உடல் கருகி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராமஜெயத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating