எனக்கு விவாகரத்து வேண்டும்…!!
“வெயில்” என்ற தமிழ் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மலையாளத்தில் இவர் நடித்த “விலாபங்கள்க்கு அப்புறம்” என்ற படம் இவருக்கு 2008-ம் ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை தேடித்தந்தது.
தொடர்ந்து நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக “நமஸ்த கேரளம் பி.ஓ” மற்றும் மோகன்லாலுடன் கதாநாயகியாக “இவிடம் சொர்க்கமானு” என்ற படத்திலும் நடித்து புகழ் பெற்றார். 2012-ம் ஆண்டு மே23-ந் தேதி தமிழ் பட இயக்குனர் லாரன்சுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் மிக எளிமையாக நடந்தது. இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற 3 வயது மகன் உள்ளார். நடிகை பிரியங்காவுக்கு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்கு அவரது கணவர் லாரன்ஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் இருவரையும் சேர்த்து வைக்க நடத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா தற்போது கணவரை பிரிந்து, மகனுடன் சொந்த ஊரான வாமனாபுரத்தில் குடும்ப வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் விவாகரத்து கேட்டு நடிகை பிரியங்கா, திருவனந்தபுரத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனது இன்டர்நெட்டை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக கணவர் லாரன்ஸ் மீது ஐ.டி சட்டத்தின் படியும் நடிகை பிரியங்கா தனது சொந்த ஊரான வாமனாபுரம் எல்லைக்குட்பட்ட நெடுமங்காடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
Average Rating