கங்கைகொண்டானில் சாப்ட்வேர் பார்க்- கடம்பூர் விமான தளம் புதுப்பிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட விமான தளத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி விமானப்படை அதிகாரிகள் விமான தளத்தை ஆய்வு செய்தனர். கடம்பூரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 52 ஏக்கர் பரப்பளவில் ராணுவ விமான தளம் செயல்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரை ஓட்டி 1942ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான தளம் ஆங்கிலேயர்கள் தங்களது படைபலத்தை தென்தமிழகத்தில் நிறுவ பயனுள்ளதாக இருந்தது. தற்போது கங்கைகொண்டானில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுதை ஒட்டி கடம்பூர் விமான தளத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கோவை சூலூர் விமானபடை தளத்திலிருந்து விமானப்படை தெற்கு பிராந்திய கமாண்டர் பவுல் ஜேக்கப் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் விமான தளத்திற்கு வந்தனர். விமான தளத்தை பார்வையிட்ட அவர்கள் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள், போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். விமான நிலையத்தின் 52 ஏக்கர் பரப்பளவையும் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர்.