பழனியில் அதிகாலையில் கோவில் ஊழியர் வெட்டிக்கொலை!!
பழனி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் செல்வராஜ் (வயது38). பழனி மலைக்கோவில் இழுவை ரெயில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. குகன் (7), தீபிகா (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
செல்வராஜ் வழக்கமாக தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வேலைக்கு செல்வார். அதுபோல் இன்று அதிகாலை எழுந்த அவர் காப்பி குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
பால்பண்ணை அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். திடுக்கிட்ட செல்வராஜ் தப்பிக்க முயன்றார். எனினும் அவர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ் துடிதுடித்து இறந்தார். அதன் பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வேலைக்கு வராததால் மேல் அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து மற்ற ஊழியர்கள் அவரை தேடி வீட்டுக்கு வந்தனர். அப்போது பால்பண்ணை அருகே செல்வராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின்னரே இந்த சம்பவம் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. செல்வராஜின் மனைவி கவிதா குழந்தைகளுடன் நேற்று மூலனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவரும் உறவினர்களும் அங்கு வந்து கதறி அழுதனர். சம்பவ இடத்துக்கு பழனி டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவில் ஊழியர் செல்வராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating