தர்மபுரி அருகே மாணவிகள் பாலியல் புகார்: பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி கைது!!
தர்மபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சின்னமாது (வயது 48). இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளில் சிலரை தொட்டு பேசுவது, முகத்தில் கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ‘வாட்ஸ்–அப்’ மூலம் தர்மபுரி சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சென்ற புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட விதம் தொடர்பான போட்டோ ஆதாரங்களும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தன. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. புகாரில் முகாந்திரம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் சின்னமாது மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு தலைமை ஆசிரியர் சின்னமாதுவை பணிஇடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தலைமை ஆசிரியர் சின்னமாது மீது தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரவு மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தலைமையாசிரியர் சின்னமாதுவை அனைத்து மகளிர் காவல் போலீசார் இன்று கைது செய்தனர்.
அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் எண்.9(எப்) (எல்) (எம்) (பி) 2012 மற்றும் ரெட் வித் 10, 11, 12 ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்திலும், மாவட்ட கல்வி துறைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating