பீகார் கல்லூரியில் ஒட்டுமொத்தமாக அமர்ந்து காப்பி அடித்த மாணவிகள் தேர்வு அடியோடு ரத்து!!
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் சமஸ்திபூரில் மிதிலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பி.ஏ. 2–வது பகுதி தேர்வு நடந்தது.
அப்போது மாணவிகள் எதிர்எதிரில் அமர்ந்து ஒட்டு மொத்தமாக அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து தேர்வு எழுதினார்கள். சிலர் புத்தகங்களையும் பார்த்து தேர்வு எழுதினார்கள்.
இந்த காட்சிகளை ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து விட்டார். அது உள்ளூர் தொலைக்காட்சிகளில் மாறி மாறி ஒளிபரப்பாகி பொது மக்கள் மத்தியிலும், மாணவ–மாணவிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் சாகெட் குஷ்வாகா நிர்வாக குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். காப்பி அடித்தது பற்றி விசாரணை நடத்த 3 பேர் குழுவை நியமித்து முடிவு எடுக்கப்பட்டது. தேர்வை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் தேர்வு ரத்து செய்யப்படும் உத்தரவை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டார். விசாரணை குழு அறிக்கை 3 நாளில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மிதிலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் பல கல்லூரிகளில் இதுபோல் மாணவர்கள் ஒட்டு மொத்தமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் விடைத்தாளை பார்த்தும், புத்தகத்தை பார்த்தும் காப்பி அடித்து தேர்வு எழுதியது தெரியவந்தது.
இதையடுத்து மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2–வது பிரிவு தேர்வையும், மற்ற கல்லூரிகளில் பி.எஸ்.சி. 3–ம் ஆண்டு தேர்வையும் ஒட்டு மொத்தமாக ரத்து செய்து மிதிலா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் பீகாரில் மேல் நிலைப்பள்ளிகளில் பொதுத் தேர்வு நடந்த போது மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி கட்டிடங்களில் ஏறி ஜன்னல் வழியாக துண்டு சீட்டுகளை போட்டு காப்பி அடிக்க உதவினார்கள்.
இது தொடர்பான போட்டோக்களும், வீடியோ காட்சிகளும் டி.வி.க்களில் ஒளிபரப்பாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவு இருக்கலாம்.
Average Rating