பொய் வழக்கில் கைதான எனது தம்பியை சுட்டுக்கொன்று விடுவதாக இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்: இளம்பெண் புகார்!!
மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மனைவி முனீஸ்வரி. இவர் தென்மண்டல ஐ.ஜி.யை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை காமராஜர்புரம், திரு.வி.க.நகரை சேர்ந்த சண்முகவேல் மகன் காளி என்ற காளிமுத்து என்ற வெள்ளைகாளி(27) என்பவர் எனது உடன்பிறந்த தம்பி ஆவார்.
எனது தம்பி திருப்பூர் மாவட்டத்தில் கட்டிட வேலை பார்த்து வந்தான். கடந்த 7–ந் தேதி அவன் மீது வழிப்பறி செய்தான் என்று பொய்வழக்கு போட்டு பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி இரவு எனது வீட்டிற்கு தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் என்னிடம், உனது தம்பியை கோவை சிறையிலிருந்து மதுரை நீதிமன்றத்திற்கு அல்லது எங்களது கஷ்டடியில் அழைத்து வரும் போது சுட்டு கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றார்.
உடனே நான் 12–ந் தேதி எனது தம்பியை பார்க்க கோவை சிறைக்கு சென்றேன். அங்கு அவனை தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் பார்த்து உன்னால் எனக்கு என்னுடைய துறையில் இருந்து 3 மெமோ கொடுத்து விட்டார்கள். என்னால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை. உன்னை சுட்டுகொன்றாலோ அல்லது வேறு விதத்தில் உன்னை கொன்றால் தான் எனக்கு நிம்மதி. உன்னை உயிருடன் விடமாட்டேன் என்றும், மதுரை நீதிமன்றத்திற்கு வரும் போது, உன்னை கொல்வேன் என்று சபதம் போட்டு மிரட்டி சென்றதாக எனது தம்பி கூறினான்.
மேலும் திருந்தி வாழ்ந்து வந்த எனது தம்பியை சுட்டு கொல்வதாக மிரட்டும் இன்ஸ்பெக்டரிடமிருந்து எனது தம்பியின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்று கொண்ட ஐ.ஜி. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Average Rating