ஆவடியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: தப்பி ஓடிய நபரை பிடிக்க 4 தனிப்படைகள்!!
ஆவடி பகுதி இந்து முன்னணி தலைவர் எழில்முருகன்(32). நேற்று மாலை ஆவடியில் ஜே.பி.எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் நண்பர்களுடன் அமர்ந்து எழில்முருகன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது நண்பர் தாமோதரன் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால், எழில்முருகனின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி போலீசார் விரைந்து சென்று எழில்முருகனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இந்து முன்னணி பிரமுகரான எழில்முருகன், தாமோதரனை அடிக்கடி கிண்டல் செய்தது தெரியவந்தது. இதனால் கோபத்தில் இருந்த தாமோதரன் நேற்று மாலையில் ஆத்திரத்தில் இக்கொலையை செய்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தப்பி ஓடிய தாமோதரனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள தாமோதரன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். இன்று மாலைக்குள் தாமோதரன் கைது செய்யப்பட்டுவிடுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்து முன்னணி பிரமுகரான அம்பத்தூர் சுரேஷ்குமார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் நேற்று மாலையில் ஆவடியில் எழில்முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீஸ் அதிகாரிகள் முதலில் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். சுரேஷ்குமாரை போல திட்டமிட்டே எழில்முருகனும் கொலை செய்யப்பட்டுவிட்டாரோ என்று அஞ்சினர்.
ஆனால் விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே எழில்முருகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதன் பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
Average Rating