அணுசக்தியில் தன்னிறைவு பெறுவதே இறுதி இலட்சியம் என்கிறார் கலாம்
அணுசக்தி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தோரியத்தின் மூலம் இயங்கும் அணு உலைகளை அமைக்க வேண்டுமென முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டன் சென்றுள்ள அவர் பயணத்தின் நிறைவுநாளில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க – இந்திய அணு சக்தி தொடர்பாக இவரிடம் வினவப்பட்ட போது இவர் அதற்குப் பதிலளிக்கையில், அணு சக்திக்காக எந்தவொரு உடன்பாடோ அல்லது உடன்படிக்கையோ நாம் மேற்கொண்டால் அது நமக்கு உதவியளிப்பதாகவே இருக்க வேண்டும். தற்பொழுதுள்ள அணு உலைகள் அனைத்தும் யுரேனியத்தாலேயே இயங்குகின்றன. இந்த நிலை மாறி தோரியத்தால் இயங்கும் அணு உலைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் நாடு தன்னிறைவு பெற முக்கிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இதற்கு ஆதரவாக நம்நாட்டில் உள்ள யுரேனியத்தை விட தோரிய கனிம வளங்கள் ஏராளமாகவுள்ளன.
மேலும் இத்துறையில் ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். நமது விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இன்னும் ஐந்தோ அல்லது ஏழு ஆண்டுகளில் தோரியம் மூலம் இயங்கும் அணுசக்தி உலைகள் என்ற கனவு நனவாகும். அத்துடன் இதுவே நம்முடைய இறுதி இலட்சியமாகவும் இருக்க வேண்டும்.
அணுசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டுமென்பதே என்னுடைய பேரவா ஆகுமென முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.