கொலை குற்றவாளிக்கு அப்பீலில் ஆப்பு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்: இரட்டை ஆயுளை மூன்று ஆயுள் தண்டனையாக்கி உத்தரவு!!
மராட்டிய மாநிலம், நாக்பூர் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு 8 வயது பள்ளி மாணவனை கடத்திச் சென்ற ஆயுஷ் நிர்மல் புகாலியா(26) என்பவன் 2 கோடி ரூபாய் பிணையத்தொகை கேட்டு மாணவனின் தந்தையை மிரட்டினான்.
ஆனால், அவன் எதிர்ப்பார்த்தபடி பணம் கிடைக்காத ஆத்திரத்தில் 11-10-2011 அன்று அந்த சிறுவனை துடிதுடிக்க கொடூரமாக வெட்டிக் கொன்றான். இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி ஆயுஷ் நிர்மல் புகாலியாவை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கில் கடந்த 4-4-2013 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுவனை கடத்திய குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனையும், அவனை கொடூரமான முறையில் கொலை செய்து, தடயங்களை அழித்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டனையும் என இரண்டு ஆயுள் தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நாக்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும் தண்டனையை குறைக்க வேண்டும் என கோரியும் ஆயுஷ் நிர்மல் புகாலியா தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதேவேளையில், இந்த தண்டனை மிகவும் குறைவானது, திருத்தப்பட்ட குற்றவியல் சட்டப்பிரிவு 364A-ன்படி அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என போலீஸ் தரப்பிலும் அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதிகள் அருண் சவுத்ரி, பி.என்.தேஷ்முக் அடங்கிய மும்பை ஐகோர்ட் பெஞ்ச், நாக்பூர் மாவட்ட நீதிமன்றம் அளித்த இரு ஆயுள் தண்டனைகளும் சரியான தீர்ப்புதான் என்பதை உறுதி செய்தது.
மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசுதரப்பு வக்கீலின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறிய நீதிபதிகள், கீழ் கோர்ட் அளித்த இரட்டை ஆயுள் தண்டனையை மூன்று ஆயுள் தண்டனையாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளனர். முதலில் இரண்டு ஆயுள் தண்டனைகளை தனித்தனியாகவும், மூன்றாவது ஆயுள் தண்டனையை இரண்டு தண்டனைக் காலத்தின்போதும் சமகாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளனர்.
Average Rating