பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டி.ஜேயை சுட்டுக்கொன்ற வாலிபர்!!
பிறந்த நாள் பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டிஜேயை (Disc Jockey) வாலிபர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிந்தவ்லி கிராமத்தில் பிரபல நகை வியாபாரி ஒருவரது பேத்தியின் பிறந்த நாள் பார்ட்டி நேற்றிரவு நடைபெற்றது. வழக்கமாக இதுபோன்ற பார்ட்டிகளில் ‘டிஜே’ என்று அழைக்கப்படும் இசை வித்தகர் ஒருவர் பார்ட்டியில் பங்கேற்பவர்களின் விருப்பத்திற்கேற்ப பாட்டு போடுவார். அப்படிப்பட்ட, இசை வித்தகரான அருண் வால்மீகி(30) இந்த பார்ட்டியில் டிஜேவாக பணிபுரிந்தார்.
அப்போது பார்ட்டியில் கலந்து கொண்ட அஷூ என்ற வாலிபர் தனக்கு விருப்பமான பாடல் ஒன்றை போடும்படி அருணை வற்புறுத்தினார். அந்தப் பாடல் தனது இசைத்தொகுப்பில் இல்லாததால் அந்தப் பாடலை போட முடியாது என்று அருண் பொறுமையாகக் கூறினார். ஆனால் பாடலை போட்டே ஆக வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்ட அஷூ திடீரென தன் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருணை சரமாரியாக சுட்டார்.
இந்தக் கொடூர தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அருண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த காவல் துறையினர் அஷூன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அஷூ தலைமறைவாகி விட்டதால், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating