பெனசிருக்கு முஷாரப் கண்டனம்
கடந்த சில மாதங்களாக ரகசிய ஒப்பந்தம் காரணமாக அடக்கி வாசித்து வந்த பாகிஸ்தான் அதிபர் முஷாரப், தற்போது முன்னாள் பிரதமர் பெனசிருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஆளும் கட்சியினரை குற்றம் சாட்டி பெனசிர் தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெனசிர் நாடு திரும்புவதற்கு முன், முஷாரப்புக்கும் அவருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதிகார பகிர்வு தொடர்பாக இருவரும் கலந்து ஆலோசித்தனர். பாகிஸ்தான் திரும்பிய பெனசிர், நடத்திய பேரணியில் மனித வெடிகுண்டு வெடித்து பலர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆளும் பி.எம்.எல்.,க்யூ கட்சியே காரணம் என பெனசிர் சரமாரியாக குற்றம் சாட்டினர்.ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று முன்தினம், பிரதமர் சவுகத் அஜீஸ் வீட்டில் நடந்தது. இதில், அதிபர் முஷாரப்பும் கலந்து கொண்டார். பெனசிர் தெரிவித்த கருத்துகள் குறித்து ஆளும் கட்சியினர் கவலை தெரிவித்தனர். இதற்கு அதிபர் முஷாரப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ஆளும் கட்சியினருக்கு சாதகமாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த தகவலை முஷாரப்பின் முக்கிய ஆதரவாளரும், ரயில்வே அமைச்சருமான ஷேக் ரஷீத், நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவது குறித்து கேட்ட போது, “பொது தேர்தல் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. அதற்கு முன் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டாது’ என்று அமைச்சர் ஷேக் ரஷீத் கூறினார்.ஆனால், நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் செல்ல சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவரது கட்சியான பி.எம்.எல்., என் கட்சியின் பொறுப்பு தலைவர் மக்துõம் ஜாவீத் அஷ்மி தெரிவித்துள்ளார். நவம்பரில் நவாஸ் நாடு திரும்புவார் என்றும் அவர் கூறியுள்ளார்.