பயங்கரவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவோம் : வாய் திறந்தார் ராஜபக்சே
“பயங்கரவாத சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது,” என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறினார். அனுராதபுரம் விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், முதல் முதலாக நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அதுபற்றி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்வதன் மூலமே நாட்டு மக்களுக்கு விடுதலை கிடைக்கும். இது எங்களின் முக்கிய பணி. அதை நிறைவேற்றிக் காட்டுவோம். புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக் கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது. புலிகளால் அனுராதபுரத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற தாக்குதலை போலீஸ் மற்றும் ராணுவத்தினரால் மட்டுமே தடுத்து நிறுத்தி விட முடியாது. மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். மக்கள் எந்த நேரத்திலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புலிகளின் விமான தள தாக்குதலால் அரசு கவிழ்ந்து விடும் என சிலர் கனவு காண்கின்றனர். இந்த கனவு பலிக்காது. நாங்கள் சோம்பேறிகள் அல்ல. வன்னிப் பகுதியில் தாக்குதலை துவங்கியுள்ளோம். எங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் திருப்பி தாக்குவோம். நீண்ட காலம் பொறுமையாக இருந்ததற்கு பிறகே தாக்குதல் நடத்தும் முயற்சியை துவக்கினோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதற்கு பின்னரே போரிட்டோம். இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
இதற்கிடையே, மன்னார் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் ஆறு விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிராந்தியத்தின் போலீஸ் உயர் அதிகாரி நோயல் சந்தனா கூறுகையில், “தீவிர தேடுதல் வேட்டையில் ஆறு புலிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் புலிகளின் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்டவர். இவர்களிடமிருந்து ஏராளமான வெடிமருந்துகளும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், இவர்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட புலிகள் உளவுப்பிரிவு தலைவரின் பெயர் விவேகானந்தன் என்ற கந்தன் என தெரிய வந்துள்ளது. இவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னார் பகுதியில் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்” என்றார்.